: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என பெயர் சூட்டும் தீர்மானத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா சட்டசபையில் பேசியதை சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை, தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உயிர்நீத்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவ ந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து, 1961 ஆம் ஆண்டிலும், 1963-ஆம் ஆண்டிலும் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் தோல்வி கண்டன.
1967ல் திமுக முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான் இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானதும் சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1967 ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய அன்றைய முதல்வர் அண்ணாவால் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இந்த நாள் தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு நாள்” என கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவால் 1967 ஜூலை 18ல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 1968 நவம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது. 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு நாள் விழா இன்று, பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். “தமிழ்நாடு நாள்”.. இன்று காஞ்சிபுரத்தில் தமிழக அரசு சார்பில் விழா.. அமைச்சர்கள் பங்கேற்பு! இந்நிலையில், தமிழ்நாடு என பெயர் சூட்டும் தீர்மானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டசபையில் 1968 ஜூலை 18 ஆம் தேதி பேசிய குரல் பதிவை சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.
கடல் கண்டு, மலை கண்டு, களங்கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க..! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!
