தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகதான் காரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக போராட்டம் நடத்தியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்கட்டண உயர்வு தொடர்பாக, அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அவர்களது நடவடிக்கை இருக்கிறது. மின்கட்டண உயர்வுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் என அப்போதைய ஒன்றிய அரசு சொன்னபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். திமுகவும் எதிர்த்தது.

ஆனால் அம்மையார் மருத்துவமனையில் இருந்த நிலையில், அன்றைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மேலே இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக உதய்மின் திட்டத்தில் இணைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய மின்துறை அமைச்சர் கையெழுத்து போட்டு இந்த திட்டத்தில் இணைத்து கொண்டார். இது, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது அன்றைய அதிமுக அரசு.

கடந்த 2011- 12-ம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் இருந்தபோது, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒட்டு மொத்த நிதி இழப்பு 18 ஆயிரத்து 954 கோடி ரூபாய் ஆக இருந்தது.

பின்னர் 10 ஆண்டுகால திறனற்ற அதிமுக ஆட்சியில் இந்த செலவு, 94 ஆயிரத்து 312 கோடி ரூபாய் ஆக அதிகரித்ததுடன், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு வரை, 1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாய் ஆக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு அதிகரித்தது.

இதற்கு காரணம் யார்? அதிமுக அரசுதான். பின்பு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நிதி இழப்பினை அரசே ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்த நிதி இழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கடன், 43 ஆயிரத்து 493 கோடி ரூபாய் ஆக இருந்தது. இது, அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து, 2021 திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு கடன் மட்டும் 1 லட்சத்து 59ஆயிரத்து 823 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.

இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். வட்டியை பொறுத்தவரை, 2011 திமுக ஆட்சியில் இருக்கும்வரை, 4,588 கோடி ரூபாய் ஆக இருந்தது. பின்பு 259 சதவீதம் ஆக அதிமுக ஆட்சியில் கூடியது. அதன்படி வட்டி மட்டும் 2021-ல் 16511 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.

இந்த சூழலில்தான், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை மோசமாக வைத்து விட்டு சென்றார்கள். இந்த இழப்புகளை சரி கட்டதான் தற்போதைய மின் கட்டண உயர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1 கோடி பேருக்கு மின்கட்டண உயர்வு வராது. குறைந்த அளவில்தான் மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், மிக குறைவான அளவில் மின் கட்டண நிர்ணயம் தமிழ்நாட்டில் மட்டும்தான்.

அதிமுக ஆட்சியில் 2012, 13, 14 ஆண்டுகளில் முறையே 3.7, 3.57, 16.33 சதவீதம் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதையெல்லாம் மறைத்து விட்டு மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இன்று மின்வாரிய நிதிநிலை நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, பங்கு மூலதனம், மின்கட்டண மானியம், கடன் உதவிகள் என வழங்கி கொண்டு வருகிறது.

வருவாய் இழப்பை சரி செய்யும் வகையிலும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக மட்டும் 32 ஆயிரத்து104 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்துக்கு வழங்கி இருக்கிறது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment