டெல்டா பாசனத்திற்கு இன்று(ஜூலை 28) மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து வைக்கப்படுகிறது. இதனையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு இதன் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போதைய நிலையில் அணை நீர்மட்டம் 109.20 அடியாகவும் நீர்இருப்பு 77.30 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. காவிரியில் நீர் வரத்து மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை திறந்து விடுவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பிறகு, மாலை 3:00 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

இதன்படி அமைச்சர் நேரு அணையை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து, காவிரி ஆற்றங்கரையோரங்களில் நின்று செல்பி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என சேலம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1,58,000 கன அடியாக அதிகரித்துள்ளது.