தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதமாற்றம் தொடர்பான மோதலில் கடந்த 2019-இல் ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை என தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.