உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலானது.
அந்த விடியோவில், வெவ்வேறு அரசு அடையாள அட்டைகளுடன் வெவ்வேறு நேர இடைவெளியில் இளைஞர் ஒருவர் எட்டு முறை பாஜகவுக்கு வாக்களிப்பதைக் காணலாம். இந்த விடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் ஆகியோர் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக உத்திரப் பிரேதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்து ராஜன் சிங் என்ற 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
இதனிடையே சிறுவன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்திரப் பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.