100 வயதை கடந்தும் நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, நல்லகண்ணுவிற்கு கம்பீரம் மற்றும் செவ்வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

நான் இங்கு வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன். 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை; கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கினேன்.

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார் நல்லகண்ணு. உழைப்பால் கிடைத்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார்.

அம்பேத்கர், தகைசால் தமிழர் விருது பரிசுத் தொகையை கூட தமிழக அரசுக்கு திருப்பி அளித்தார். உயர் நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட் உடனான நட்பு தேர்தல் அரசியலைத் தாண்டிய கொள்கை நட்பு. திமுக உருவாகவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்திருப்பேன் என்று கருணாநிதி கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment