விருதுநகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஓருவர் பலி, 37 பேர் படுகாயம்

கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (து 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார்.

இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது.

இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிய பிரபு மற்றும் புவனேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

Leave a Comment