கம்பம் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து ஒருவர் பலி- 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் பிரசவ வார்டு மேம்படுத்தும் பணி ரூ.10 கோடியில் நடந்து வருகிறது.

இந்த நிதியில் 3 மாடி புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2022 ஜனவரியில் தொடங்கியது. ஓராண்டில் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவு பெற வில்லை.

இந்நிலையில் நேற்று போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று தொழிலாளர்கள் சிமெண்டு பூச்சு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருபுறங்களிலும் இருந்த பில்லர்கள் திடீரென இடிந்து விழுந்ததில் மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (வயது40) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் பணியில் இருந்த மதுரையை சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (42) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையை தரமான முறையில் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் தரமற்ற முறையில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர் பாண்டியராஜ், என்ஜினீயர்கள் வெங்கடாசலம், மணிவண்ணன், நவீன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 5 பேர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment