ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியருக்கு, குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் என்பிஎஸ், யுபிஎஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் எனவும், இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.