ஆந்திர மாநிலம், கம்மத்தில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு உயிர் உள்ள மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
மெகபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மரிபெடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் லாரியில் உயிருடன் இருந்த மீன்கள் சாலை முழுவதும் துள்ளி குதித்தன.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று மீன்களை பிடித்தனர். அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாக்கு பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்து துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.