கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கருப்பாயி என்பவரும் தனது பாடல்களால் கொல்லங்குடிக்கு பெருமை சேர்த்தார்.
இவரது வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது.
பின்னர் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன் கண்ணில் பட்டதால் அவரது ஆண்பாவம் படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களை பாடவும் வைத்தார். தொடர்ந்து அவருடன் ஆயுசு நூறு, கோபாலா கோபாலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
நாட்டுப்புறப்பாடல்களில் முன்னோடியாக கருதப்படும் இவருக்கு கடந்த 1993 -ல் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார். கொல்லங்குடியில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக தனது 99 -ஆவது வயதில் காலமானார்.