95 முறை மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

மத்தியப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு அம்மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பின்போது, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், “தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி” என்று தீர்ப்பளித்துள்ளார்.

மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் காஞ்சன், குடும்பத் தகராறை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அன்று தனது மாமியார் சரோஜ் கோலை அரிவாளால் 95 முறை குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனியாக கிடந்த சரோஜை, அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சரோஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வால்மிக் கோல் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளை கொலை செய்ய தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.

ஆனால் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

Related posts

Leave a Comment