ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல மற்றொரு பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரிலும் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.