இலங்கை அதிபர் தேர்தலில்மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டி தமிழர்களின் முடிவு என்ன?

இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.

அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.

இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment