பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற 4 தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை- தமிழக முதலமைச்சர் வழங்கினார்

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”யை உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment