இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ. 66.11 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை; டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை பறித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணையை துவக்கினர். இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என, ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கியின் கணக்கினை முடக்கினர். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.
மோசடி கும்பல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களை போலீஸ் அதிகாரி, தகவல் தொடர்பு துறை அலுவலக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொய்களை கூறி அப்பாவி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப், 54; ராகேஷ் கோஷ், 39; அமித் சர்தார், 36, ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கில் 66 கோடியே 11 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன், போலீசார் மணிமொழி, பாலாஜி, வினோத் மற்றும் ரோஸ்லின் மேரி ஆகியோரை சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பாராட்டினார். இதுகுறித்து சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், ‘பொதுமக்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக, மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும், வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியதால், வங்கி கணக்கில் சட்டத்திற்கு விரோதமாக பணம் வந்துள்ளது என மோசடி கும்பலிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்தால், அதை நம்ப வேண்டாம். அதை நம்பி பணம் செலுத்தவும் வேண்டாம்.
இது சம்மந்தமாக, உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கவும். தங்களுடைய வங்கி கணக்குகள், சிம் கார்டு உள்ளிட்டவைகளின் விவரங்களை யாரிடமும் அளிக்க வேண்டாம் என, கூறினார்.