33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 30 மணிக்கு தொடங்குகிறது. நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.