அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அமெரிக்காவிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.
உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை தொடங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28 ஆம் தேதி அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அங்கே இருந்திருந்தேன். இந்த 14 நாட்களும் மிகப் பெரிய பயனுள்ளதாக இந்தப் பயணம் அமைந்தது.
உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். இதில் 19 நிறுவனங்களுடனா சந்திப்புகளின் போது, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த 29.8.2024 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை கேட்டுக் கொண்டேன்.
இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்களது வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க முன்வந்துள்ளது.
அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி அமைத்து, உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்று சொன்னார்கள்.
அதற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவித்த காரணத்தினால் அனைத்து வசதிகளும் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்ற அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்கள் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.
நாங்கள் சிகாகோ விமான நிலையத்தில் விமானத்தில் உட்கார்ந்த பிறகு அறிவித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அந்த செய்தியை இன்றைக்கு உங்களுடன் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டிருக்கிறேன்.
அதேபோல, எனது கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு, அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், வணிகம் புரிவதற்கும் உகந்த சூழ்நிலையை நிலவுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலும், செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோ நகரிலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் நான் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழ் அமைப்புகள் அனைத்துக்கும் என்னுடைய நன்றிகள்.
ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அமெரிக்க பயணம் மற்றும் ஓப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுனவர் ராமதாஸ் வலியுறுத்திருப்பது குறித்த கேள்விக்கு, இது அரசியலுக்கு பேசப்படுவது. நான் அமெரிக்க செல்வதற்கு முன்பே, வெளிநாட்டு பயண முதலீடுகள் குறித்து விளக்கி உள்ளேன். தொழிற்துறை அமைச்சரும் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட ஒப்பந்தங்களில் பத்து சதவீதம் கூட நிறைவேறவில்லை.மது ஒழிப்பு மாநாடு அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல, அதற்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என மது ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார். அதற்குமேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, திமுக பவள விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நிச்சயமா, உறுதியா நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் என்று நம்புவதாகவும், திமுக சொன்னதை தான் செய்யும். செய்ததை தான் சொல்லும் என பதிலளித்தார்.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதால் சமக்ரா சிக்ஷா திட்ட நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, புதிய கல்விக்கொள்கை, மெட்ரோ ரயில் 2 ஆம் வழித்தட பணிக்கான நிதி தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.